பொருளாதார விவகாரத்தில் இலங்கை நிலைதான் இந்தியாவிலும் உள்ளது - காங். முன்னாள் தலைவர் ராகுல் கருத்து

By செய்திப்பிரிவு

புதுதில்லி: வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

இந்தியாவிலும், இலங்கையிலும் வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரங்கள் ஆகியவற்றின் 6 வரைபடங்களை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒப்பீடு செய்துள்ளார்.

இந்த 3 விஷயத்திலும், இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவிலும், இலங்கையிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து 2020-ம் ஆண்டில் உச்சம் அடைந்திருப்பதை முதலாவது வரைபடம் காட்டுகிறது.

இரு நாட்டிலும் எரிபொருள் விலை கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரை உயர்ந்துள்ளதை 2-வது வரைபடம் காட்டுகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டில் இரு நாடுகளிலும், மதவன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை 3-வது வரைபடம் காட்டுகிறது.

மக்களை திசை திருப்புவதால், உண்மைகள் மாறாது. இலங்கையின் நிலைதான் இந்தியாவில் உள்ளது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE