முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

தென்மேற்கு பருவமழைக் காலம் முன்கூட்டிய தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் திங்கள் கிழமையன்றே தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையைத் தான் இந்திய விவசாயிகள் பிரதானமாக நம்பியிருக்கின்றனர்.

இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. அதனால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவக் காற்றால் மழை பெய்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐஎம்டி பகிர்ந்த ட்வீட்டில், "தென்மேற்கு பருவமழையானது இன்று (மே 16 ஆம் தேதி) தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடங்கிவிட்டது. இது மேலும் வலுப்பெற்று, ஒட்டுமொத்த அந்தமான நிக்கோபார் பகுதி, வங்கக்கடலின் கிழக்கு-மத்திய பகுதிகளிலும் அடுத்த இரண்டு, மூன்று தினங்களில் உருவாக சாதகமான சூழல் நிலவுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஐஎம்டி வெளியிட்ட ட்வீட்டில் தென்மேற்கு பருவமழையானது ஜூன் 1க்குப் பதிலாக முன் கூட்டியே மே 27ஆம் தேதியிலேயே கேரளாவில் பெய்யக் கூடும் என்று என்று கணித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது. அசானி புயலின் எச்சங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் இந்த சாதகச் சூழல் உருவானதாக விளக்கியிருந்தது.

இந்நிலையில் அந்தமான் நிகோபார் தீவுகளில் திங்கள் கிழமையன்றே தென்மேற்கு பருவமழை உருவாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி இருக்கும் பருவமழை? இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று ஏப்ரலில் வெளியிட்ட முன்அறிவிப்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அறிவிப்பில், வடமாநிலங்கள், மத்திய இந்திய பகுதிகளில் இயல்பானது முதல் அதற்கும் கூடுதலான அளவு மழை பெய்யக்கூடும் என்றும், இமாலய மலை அடிவாரம், வடமேற்கு இந்தியாவிலும் இதே நிலையே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. வடகிழக்கு, வட மேற்கு, தென் பகுதிகளில் இயல்பை விட குறைவான அளவிலேயே மழை இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அடுத்த அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE