தாஜ்மகாலில் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறந்து பார்க்க வழக்கு தொடர்ந்த பாஜக : நிராகரித்த அலகாபாத் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

லக்னோ: தாஜ்மகாலில் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறந்து பார்க்க உத்தரவிடக் கோரிய பாஜகவின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை அமர்வு நிராகரித்துள்ளது.

முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் ஆறாம் நூற்றாண்டில், பளிங்குக்கற்களால் கட்டியது தாஜ்மகால். தற்போது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாகப் புகார் உள்ளது. இக்கோயிலின் சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில், இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

என்ன நடந்தது? தாஜ்மகாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளை திறந்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பாஜக இளைஞர் அணி ஊடக பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது நீதிமன்றம். அதனை கொண்டாடும் வகையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். பாஜக ஆதரவாளர்கள் இதனை வரவேற்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) லக்னோ கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், " உண்மை, எதுவாக இருந்தாலும் இந்த பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்கப்பட வேண்டும். இதனை பல்வேறு வழிமுறைகளின் கீழ் மேற்கொள்ள வேண்டும். மேலும் இதில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் செய்ய வேண்டிய பணி" என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அதோடு இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னதாக, தாஜ்மகால் நிறுவப்பட்டுள்ள இடத்தில் ஜெய்ப்பூர் ராஜ வம்சத்தினரின் நிலம் இருந்ததாகவும். அதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் சொல்லி இருந்தார் பாஜக எம்.பி-யும், ராஜ வம்சத்தை சேர்ந்தவருமான தியா குமாரி. இதற்கு முன்பு கூட பல்வேறு காலகட்டங்களில் தாஜ்மகால் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE