டெல்லி ஜஹங்கீர்புரி கலவரம் | கைதான முகமது அன்ஸரின் குற்றப் பின்புலத் தகவல்கள்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லி ஜஹங்கீர்புரியில் ராமநவமி ஊர்வலத்தின் கலவரத்திற்கு காரணம் எனப் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக கைதான முக்கிய நபர் முகம்மது அன்ஸர் (35) என்பவர் பற்றிய பரபரப்பு தகவல்களும் வெளிவந்துள்ளன.

இந்தச் சம்பவத்தின் மீது ஜஹங்கீர்புரி காவல் நிலையத்தின் ஆய்வாளரான ராஜீவ் ரஞ்சன் பதிவு செய்த வழக்கில் வாக்குமூலத்தில் சில விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. இதில், அப்பகுதியை சேர்ந்த முகம்மது அன்ஸர் பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த ஏப்ரல் 16 ராம்நவமி அன்று மாலை 4.15 மணிக்கு டெல்லியின் ஜஹங்கீர்புரியில் ஊர்வலம் துவங்கியது. 'ஷோபா யாத்ரா' எனும் பெயரிலான இது நடைபெற்ற அன்று, முஸ்லிம்களின் ரம்ஜான் நோன்பு நாட்கள் ஆகும். சரியாக மாலை 6.30 மணிக்கு அதை முடிக்கும் நேரத்தில் ஜஹங்கீர்புரி சி-பிளாக் மசூதியின் முன் ஊர்வலம் வந்தது. அப்பகுதியில் மூன்று முறை சுற்றி வந்ததாகவும் முஸ்லிம்கள் தரப்பில் புகார் உள்ளது.

இந்நிலையில், மசூதியின் முன்பாக வந்தபோது, அங்கு சில இளைஞர்களுடன் நின்றிருந்த முகம்மது அன்ஸர் ஊர்வலத்தினருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதன் காரணமாக, ஊர்வலத்தின் தொடக்கத்தில் இருதரப்பினரின் தள்ளுமுள்ளு காரணமாக நெரிசல் ஏற்பட்டது.

பிறகு, இரண்டு தரப்பினரையும் போலீஸார் தனித்தனியாகப் பிரித்தும், வாக்குவாதம் முற்றிக் கலவரமாக வெடித்தது. இதில் அப்பகுதிவாசிகளில் பலரும் இணைந்துகொள்ள இருதரப்பிலும் கற்களும், கண்ணாடி பாட்டீல்களும் வீசப்பட்டு, அச்சாலையின் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. அதேசமயம், அன்ஸருடன் நின்றிருந்த இளைஞர்களில் ஒருவரான முகம்மது அஸ்லம் (25) என்பவர் தன்னிடமுள்ள கைத்துப்பாக்கியால் ஊர்வலத்தினரை நோக்கி சுட்டுள்ளார். இதில், ஜஹங்கீர்புரி காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் காயம் அடைந்துள்ளார்.

எனினும், இரண்டு தரப்பிலும் மேலும் எட்டு காவலர்களுடன் மொத்தம் 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த கவலரத்தை ஒடுக்க சுமார் 60 கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டதாகவும் ஆய்வாளர் ராஜீவ் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், போதுமான பாதுகாப்பு இல்லாத நிலையில் நடைபெற்ற ஊர்வலத்தின் வன்முறைக்கு பின் மத்திய போலீஸார் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் கைதான 20 பேரில் ஜஹங்கீர்புரியின் பி-பிளாக்கை சேர்ந்த முகம்மது அஸ்லம் என்பவர் முக்கிய நபராகக் கருதப்படுகிறார். இவர் மீது ஏற்கெனவே கலவரம் தூண்டியது, சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளிட்ட இரண்டு வழக்குகள் பதிவாகி நடைபெற்று வருகின்றன. இதில் ஒன்றாக கடந்த பிப்ரவரி 20, 2009-இல் கையில் கத்தியுடன் கைதாகி உள்ளார்.

பிறகு மீண்டும் 2018-இல் அரசு அதிகாரியை அலுவலகத்தில் மிரட்டியதாகவும் கைதானார் அன்ஸர். நான்காம் வகுப்பு வரை பயின்ற முகம்மது அன்ஸர், ஜஹங்கீர்புரியின் குடிசைப் பகுதியில் பிறந்து வளர்ந்துள்ளார். இவர் கலவரம் சமயத்தில் வீட்டை விட்டு கிளம்பியதை அன்ஸரின் மனைவியான சகீனாவும் போலீஸாரிடம் உறுதி செய்துள்ளார். இவரை டெல்லியின் ரோகிணி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்திய போது அன்ஸர் தம் செயலுக்காக வருத்தமும், அச்சமும் காட்டியதாகத் தெரியவில்லை.

மாறாக, தன்னை 'புஷ்பா' படத்தின் நாயகன் பாணியில், தன் வலது கையால் தம் தாடையை சிரித்தபடி வளைத்து தடவிக் காட்டியுள்ளார். இந்தக் காட்சிகள் ஊடகங்களில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, இன்று டெல்லியின் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். இதில், முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் முகம்மது அன்ஸர், அப்பகுதி ஆம் ஆத்மி கட்சியின் எம் எல்ஏவிற்கு மிகவும் நெருக்கமானவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE