டெல்லியில் திடீரென அதிகரிக்கும் கரோனா - பள்ளிகளை மூடுவது குறித்து துணை முதல்வர் சிசோடியா விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை அன்று இந்தியாவில் மொத்தமாக 949 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் புதிதாக 325 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் கரோனா தொற்று பரவல் 0.57 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் தற்போது அது 2.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 48 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் 574 பேர் வீட்டுத் தனிமையில் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடைசி வாய்ப்பு

இந்நிலையில் பள்ளிகள் மூடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ‘கல்வியில் இடையூறு ஏற்படுத்த அரசு விரும்பவில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கல்வி நிலையங்களை தொடர்ந்து இயங்கச் செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது. எனவே பள்ளிகள் மூடப்படுவது என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கும். தேவையெனில், பாதி அளவில் மூடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி மட்டுமல்லாது மகாராஷ்டிராவிலும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா தொற்றின் புதிய திரிபுகளான ஒமைக்ரான் எக்ஸ்இ மற்றும் பிஏ.2 மிக வேகமான பரவும் தன்மைகொண்டவை என்றும் தற்போது தொற்று அதிகரிப்பதற்கு அவைதான் காரணம் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்டுப்பாடுகள் தளர்வால்..

மேலும், தற்போது மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டிருப்பதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் கரோனாவின் புதிய திரிபுகள் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன. தென்கொரியாவில் தினமும் 1.5 லட்சத்துக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் உலக நாடுகள் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கத் தொடங்கியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE