பிரதமர் மோடியுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு: என்சிபி தலைவர்கள் மீதான வழக்குகள் எதிரொலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இன்று பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் இன்று சந்தித்து பேசினார்.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இருந்து குரு ஆசிஷ் என்ற கட்டுமான நிறுவன உரிமையாளர் பிரவீன் ராவத் முறைகேடாக ரூ.100 கோடி கடன் பெற்றதாகவும் அந்தப் பணத்தை தன் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சஞ்சய் ராவத்தின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை போட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் பிரவீன் ராவத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத், பிரவீன் ராவத் மற்றும் சுஜித் பட்கர் என்பவரின் மனைவி ஸ்வப்னா பட்கர் ஆகியோருக்கு சொந்தமான ரூ.11.15 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. சரத் பவார் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக்கை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்தது.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை குறிவைக்க விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக மகாராஷ்டிராவில் ஆளும் காங்கிரஸ், சிவசேனா மற்றும் என்சிபி குற்றம்சாட்டி வருகின்றன. இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேசினர்.

பிரதமர் மோடியுடன் சரத் பவார்: கோப்புப் படம்

இதுகுறித்து சரத் பவாரின் மருமகனும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரிடம் ‘‘மகாராஷ்டிரா தலைவர்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் குறி வைத்ததாகக் கூறப்படும் விவகாரம் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதா’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர் ‘‘நாட்டின் பிரதமரும், ஒரு கட்சியின் தேசியத் தலைவரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக சந்தித்து இருக்கலாம். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்பாக பேசி இருக்கலாம்” என்று அஜித் பவார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE