மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களைத் தடுக்க ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை: தமிழச்சி கேள்விக்கு மத்திய அரசு பதில்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அகால மரணங்களை ஏற்படுத்தும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் ஆரம்ப நிலையிலேயே இதய நோய்கள் தொடர்பான சோதனை நடத்தப்படுகிறது என்று மத்திய அரசு விளக்கமளித்தது.

தமிழச்சி தங்கபாண்டியன் தனது கேள்வியில், ”தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு இஸ்கிமிக் இதய நோயால் பல அகால மரணங்கள் ஏற்பட்டன. இதனை தடுப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என வினவியிருந்தார்.

இதற்கு மக்களவையில் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சரான பாரதி பிரவின் பவார், ”ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் இதய நோய் குறித்து ஆரம்பத்திலேயே சோதனை நடத்தப்படுகிறது.

தாய்மார்களுக்கு ஏ.என்.சி. எனப்படும் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் முன்கூட்டியே இஸ்கிமிக் வகை இதய நோயை கண்டறிய முடியும். தனியார் மருத்துவர்களுக்கும் இதில் பங்களிப்பு இருக்கிறது. மேலும், என்.டி.சி. கிளினிக்குகள் மூலமும் நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இஸ்கிமிக் இதய நோய் என்றால் என்ன? இஸ்கிமிக் இதய நோய் என்பது ( ischemic heart disease) ரத்த தமனிகள் சுருங்குவதால் ஏற்படும் இதய நோய்களைக் குறிப்பிடும் மருத்துவப் பெயர். இதயத்தின் தமனிகள் சுருங்குவதுபோல் இதயத்திற்குச் செல்லும் ரத்தத்தின், ஆக்சிஜனின் அளவு குறையும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட பல இதய நோய்கள் ஏற்படும்.

கடந்த சில ஆண்டுகளாகவே இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படும் போக்கு அதிகரித்துள்ளது. இது மருத்துவ உலகுக்கே சவாலாக உள்ளது. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் இறந்தார். இது போன்று 30 வயதில் மாரடைப்பு, 25 வயது இளைஞர் மாரடைப்பில் மரணம் போன்ற பல செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இஸ்கிமிக் இதய நோய்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில் திமுக எம்.பி. இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE