புதுடெல்லி: தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர். ஆசிரியர்களுடன் ஏப்ரல் 1-ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
டெல்லி தல்கோத்ரா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1, 2022 அன்று, நடைபெறும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாட உள்ளார். மன அழுத்தமின்றி தேர்வுகளை எழுதுவது குறித்து அவர் உரையாட உள்ளார்.
இதற்காக நடைபெறவுள்ள கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சுமார் 15.7 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
“மன அழுத்தமின்றி தேர்வுகள் எழுதுவது குறித்து நாம் மீண்டும் பேசுவோம்! ஆற்றல் மிக்க தேர்வு வீரர்கள் (மாணவர்கள்), அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை, 1 ஏப்ரல் அன்று இந்தாண்டிற்கான தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.