காஷ்மீர் சிறையில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்: அமித் ஷா உத்தரவு 

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிறையில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

காஷ்மீரில் கடந்த 2018ம் ஆண்டு, 417-ஆக இருந்த தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கை, 2021ம் ஆண்டில் 229-ஆக குறைந்துள்ளது. 2018ம் ஆண்டில் 91 ஆக இருந்த வீரர்களின் பலி எண்ணிக்கை, 2021ம் ஆண்டில் 42 ஆக குறைந்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர் அவர்களின் புகலிடமாகவும், நிதி உதவி பெறும் இடமாகவும் இருக்கக் கூடாது. தீவிரவாதத் தேடுதல் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சிறையில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க, போதைப் பொருள் தடுப்புப் பிரிவை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

எல்லையில் தீவிரவாத ஊடுருவல் சம்பவம் நடைபெறாததை உறுதி செய்யுவும், பிரதமரின் தொலைநோக்கான அமைதியான மற்றும் செழிப்பான் ஜம்மு காஷ்மீரை அடையவும் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE