பெண் ஊழியர்களுக்கான இடமாற்றக் கொள்கையை கருணை அடிப்படையில் உருவாக்கவேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெண் ஊழியர்களுக்கான இடமாற்றக் கொள்கைகளை கருணை அடிப்படையில் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட ஆணையங்களுக்கு இடையேயான இடமாற்றங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில்தலையிட மறுத்து விட்டனர். பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

அரசு அலுவலகங்களில் இட மாற்றங்கள் இருக்கலாம். அது அரசின் கொள்கை முடிவுகள் சார்ந்தவை. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால் இடமாற்றக் கொள்கைகள் உருவாக்கப்படும்போது பெண் ஊழியர்களையும் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் தயாரிக்க வேண்டும்.

அந்த கொள்கைகள் கருணையுடனும், இரக்கத்துடனும் அமைய வேண்டும். பெண் ஊழியர்கள் வீடுகளில் முதன்மைப் பராமரிப்பாளர்களாக இருப்பதால், சமமற்ற பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பெண் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள்

சமூகம் மற்றும் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு கணிசமான சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என அரசுகளுக்கு பரிந்துரைக்கிறோம்.

இடமாற்றக் கொள்கைகளை உருவாக்கும் போது அரசுகள் இந்த அம்சத்தை மனதில் கொள்ள வேண்டும்.

பெண்கள் பணியிடத்தில் இருக்கும்போது அவர்களுக்கு எதிரான தொடர்ச்சியான பாகுபாடுகளை அங்கீகரிப்பதன் மூலம் கணிசமான சமத்துவத்தை அடைவதற்கான உண்மையான நோக்கத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரி வித்தனர்.

பெண் ஊழியர்கள் வீடுகளில் முதன்மைப் பராமரிப்பாளர்களாக இருப்பதால், சமமற்ற பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE