அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி: பஞ்சாபில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு?

By செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தற்போதைய நிலையில் 42.13% வாக்குகள் பெற்று அபரிமிதமான வெற்றியை பதிவு செய்து வருகிறது.

பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது.

ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சன்னி ஒரு தொகுதியில் பின் தங்கியுள்ளார். அதுபோலவே மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும் தனது தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் பின் தங்கியுள்ளார்.

அமரீந்தர் சிங் தனது பாட்டியாலா நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அஜித் பால் சிங் கோலியிடம் தோல்வியடைந்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் 58,206 வாக்குகள் பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார்.

பஞ்சாப் தேர்தலில் தற்போதைய நிலையில் முன்னிலை அடிப்படையில் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு?
பஞ்சாபில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வருமாறு:

ஆம் ஆத்மி: 42.13%
காங்கிரஸ்: 22.92%
அகாலி தளம்: 18.22%
பாஜக: 6.58%
பகுஜன் சமாஜ்: 1.83%
சிபிஐ: 0.05%
சிபிஐஎம்: 0.06%
சிபிஐஎம்எல்: 0.03%
இதர கட்சிகள்: 7.42%

இது தற்போதைய நிலவரம் தான். வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிவுகள் முழுமையாக வெளியிடப்பட்ட பின்பு இந்த சதவீதம் மாறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE