உ.பி. 7-ம் கட்டத் தேர்தல்:  விறுவிறுப்பான வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரபிரதேச சட்டப் பேரவைக்கான 7-ம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் தற்போது நடந்து வருகிறது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுகிறது.

7-வது கட்டம் மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அசம்கார், மாவ், ஜான்பூர், காஜிப்பூர், சண்டாலி, வாரணாசி, மிர்சாபூர், பதோகி மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
மொத்தம் 613 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். 2.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 10-ந்தேதி எண்ணப்படுகின்றன.

உத்தர பிரதேசம் மட்டுமின்றி உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்தலில் பதிவான வாக்குகளும் 10-ம் தேதியே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE