திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியீடு

By செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு கூடுதல் டிக்கெட்களை வழங்குவது என தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. மேலும், மார்ச் மாதம் சுவாமியை சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனம் மூலம் தரிசிக்க இன்று (23-ம் தேதி) காலை 9 மணிக்கு இணையதளம் மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.

கரோனா 3-ம் அலை கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாளை 24-ம் தேதி முதல், இம்மாதம் 28-ம்தேதி வரை தினமும் 13 ஆயிரம்டிக்கெட்டுகள் வீதம் ரூ.300 சிறப்புதரிசன கூடுதல் டிக்கெட்டுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று 23-ம் தேதிகாலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட உள்ளது.

இதேபோன்று, தற்போது திருப்பதியில் பூதேவி காம்ப்ளக்ஸ், நிவாசம், கோவிந்தராஜ சுவாமி பக்தர்கள் தங்கும் விடுதிகளில் தினமும் 15000 சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது வரும் 26,27,மற்றும் 28-ம்தேதிகளுக்காக கூடுதலாக மேலும்5 ஆயிரம் டோக்கன் என மொத்தம் தினசரி 20 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும், வரும் மார்ச் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு ஆன்லைன் டிக்கெட்டுகள் தினசரி 25,000 வீதம் இன்று 23-ம் தேதி காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளது என திருப்பதி தேவஸ்தானம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE