இன்னும் எத்தனைக் காலம்தான் நேரு மீதே பழி போடுவீர்கள்?” - மோடிக்கு கேள்வி எழுப்பிய மன்மோகன் சிங்கின் தெறிப்புகள்

By செய்திப்பிரிவு

சண்டிகர்: ”இன்னும் எத்தனைக் காலம் தான் நேரு மீதே பழி சொல்வீர்கள்?” என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார், முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்.

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி மன்மோகன் சிங் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்துள்ளார். அதில் அவர் பேசியது: "ஒருபுறம் மக்கள் பணவீக்கத்தாலும், வேலைவாய்ப்பின்மையாலும் அவதிப்படுகின்றனர். மற்றொருபுறம் 7 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஓர் அரசு தனது தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்வதை விடுத்து, எல்லா பிரச்சினைகளுக்கு முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை காரணம் கூறுகிறது.

பிரதமரின் பதவிக்கென தனிச்சிறப்பான முக்கியத்துவம் இருக்கிறது. பிரதமர் என்பவர் அவரின் கண்ணியத்தை உணர்ந்து நடக்க வேண்டும். வரலாற்றில் பிழை கண்டுபிடித்து பழி போடுவதை நிறுத்த வேண்டும். நான் எப்போதும் இந்த தேசத்தின் கவுரவத்தை எங்கும் விட்டுக் கொடுத்ததில்லை.

இந்த அரசாங்கத்திற்கு பொருளாதார கொள்கை பற்றி புரிதல் இல்லை. வெளியுறவுக் கொள்கையிலும் அரசு தோல்வியடைந்துவிட்டது. சீனா நமது எல்லையில் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாமல் அந்தச் செய்தியைக் கட்டுப்படுத்துகிறது. வெளியுறவுக் கொள்கையை பிற நாட்டுத் தலைவர்களை வலுக்கட்டாயமாகக் கட்டிப்பிடிப்பதாலும், பிரியாணி சமைத்துக் கொடுப்பதாலும், ஊஞ்சலில் ஒன்றாக ஆடுவதாலும் மட்டும் கட்டமைக்க முடியாது. பாஜகவினர் போலி தேசியவாதிகள். இந்த அரசு பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறது.

நாங்கள் எப்போதும் நாட்டைப் பிரித்ததில்லை. உண்மையை மறைக்க முயன்றதில்லை. நாட்டின் மாண்பையோ அல்லது பிரதமரின் பதவிக்கான கண்ணியத்தையோ குறைவாக எண்ணியதில்லை. ஆனால் இன்று மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்தில் போலி தேசியவாதம் வெறும் கூடு. ஆனால் மிகவும் ஆபத்தானது. இது பிரிட்டிஷ் நாட்டவர் பின்பற்றிய பிரித்தாளும் கொள்கைக்கு சமமானது. இந்த ஆட்சியின் அரசியல் சாசன அமைப்புகள் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

பொருளாதாரக் கொள்கைகளில் சுயநலமும், பேராசையும்தான் மிகுந்து நிற்கிறது. பாஜக, என்னை எப்போதுமே வலுவற்றவன், மவுனி, ஊழல்வாதி என்று விமர்சித்தது. ஆனால், இன்று பாஜக, அதன் பி, சி டீம்கள் எல்லாம் நாட்டு மக்கள் முன்னால் சுயரூபம் தென்பட அம்பலமாகி நிற்கிறது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி.

சில நாட்களுக்கு முன்னர் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியையும் பஞ்சாப் மக்களையும் பிரதமர் மோடி அவமதித்தார். விவசாயிகளின் போராட்டத்தின்போதும் பஞ்சாப் அவமதிக்கப்பட்டது. ஆனால், இந்த உலகம் எப்போதுமே பஞ்சாபிகளை அவர்களின் துணிச்சல், தேசப்பற்று, தியாகத்தால் மட்டுமே அறிகிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு மட்டும் இவை கண்களில் தெரியவே தெரியாது. இவையெல்லாம் என் மனதை ஆழமாகக் காயப்படுத்துகிறது” என்று மன்மோகன் சிங் பேசினார்.

89 வயதான மன்மோகன் சிங் பஞ்சாபி மொழியிலேயே பேசி வெளியிட்டுள்ள இந்த வீடியோ பஞ்சாபில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE