வாரணாசி ரவிதாஸ் கோயிலில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய ராகுல், பிரியங்கா

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள குரு ரவிதாஸ் கோயிலில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா ஆகிய இருவரும் நேற்று பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.

15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞரும் புனிதத் துறவியுமான குரு ரவிதாஸின் பிறந்த நாள் நேற்றுகொண்டாடப்பட்டது.

இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரவிதாஸ் கோயிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா ஆகிய இருவரும் நேற்று வழிபாடு செய்தனர். பிறகு அங்குள்ள சமூக உணவுக் கூடத்தில் இருவரும் பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.

இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ராகுல், “புனிதத் துறவி குரு ரவிதாஸுக்கு பணிவான வணக்கம்” என்று கூறியுள்ளார்.

குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை வரும் 20-ம் தேதிக்குதேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது.

முன்னதாக இம்மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 15-16-ம் நூற்றாண்டு பக்தி இயக்கத்தைச் சேர்ந்த குரு ரவிதாஸின் பாடல்கள் குரு கிரந்த சாகிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமி நாளில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

கான்பூரில் பிரச்சாரம்

பிரியங்கா காந்தி நேற்று தனது உ.பி. பயணத்தில் கான்பூரில் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். -பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE