கர்நாடகா: ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி மாணவிகளுக்கு பல மாவட்டங்களில் அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பல மாவட்டங்களில் ஹிஜாப் அணிந்து வந்ததன் காரணமாக மாணவிகளுக்கு வகுப்புக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பல பள்ளிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஹிஜாப்பை நீக்கிய பிறகே மாணவிகள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். மாண்டியாவில் ரோட்ரி சோசைட்டி பள்ளியில் புர்கா அணிந்து வந்த ஆசிரியர்களும், புர்காவை நீக்கிய பிறகே பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.

குடகு மாவட்டத்தில் 30-க்கும் அதிகமான மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வந்ததற்காக திருப்பி அனுப்பப்பட்டனர். ஹிஜாப் அணிந்து வந்ததற்காக திருப்பி அனுப்பப்பட்ட பள்ளி மாணவி ஹினா கவுசர் கூறும்போது, “நான் பள்ளிக்கு செல்ல ஹிஜாப் அணியாமல் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். என்னால் அது முடியாது. அதனால் பள்ளிக்கு செல்லவில்லை” என்றார்.

உடுப்பியில் ஹிஜாப் அணிந்ததன் காரணமாக வகுப்புக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மாணவி ஒருவரது தாய் பேசும்போது, “பள்ளியில் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பிறகு நான், எனது மகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. என் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இந்தப் பள்ளியில் படித்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்து இருக்கிறார்கள். ஏன் தற்போது ஹிஜாப் அணிய கூடாது என்று கூறுகிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் 3 பேர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் 3 பேர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீக்‌ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் வாதிடுகையில், ‘‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணை அரசமைப்பின் 25ம் (மத உரிமை) பிரிவுக்கு எதிரானது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சீருடை நிறத்தில் ஹிஜாப் அணிய அனு மதிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி, கல்லூரிகளில் மட்டும் ஹிஜாப் அணிய தடை விதித்தது ஏன்? சீருடை, ஆடை கட்டுப்பாடு குறித்து கல்லூரி மேம்பாட்டுக் குழு எப்படி முடிவெடுக்க முடியும்? ஹிஜாபை தடை செய்ய அந்த குழுவுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை'' என்றார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE