புதுடெல்லி: ஏர் இந்தியா விமானங்களில் ரத்தன் டாடாவின் வரவேற்புரை இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி 27-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 69 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
ஏர் இந்தியா பயணிகளுக்கு ரத்தன் டாடா சிறப்பு வரவேற்பு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அனைத்து விமானப் பயணிகளையும் அன்புடன் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், குழுமத்தின் உறுதிமொழியின்படி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியாநிறுவனத்தை லாபகரமாக மாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
டாடா குழுமம் ஏர் இந்தியாவின் புதிய வாடிக்கையாளர்களை வரவேற்பதாகவும், பயணிகளுக்கு உயரிய சேவை அளிக்கவும் இணைந்து பயணிக்கவும் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது குரல் வழிபேச்சு விமானங்கள் அனைத்திலும் பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பானது. இவர் வெளியிட்டசெய்தி தற்போது சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா பயணிகளை அன்புடன் வரவேற்பதாக ரத்தன் டாடா குறிப்பிட்ட விவரம் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 1932-ம் ஆண்டு விமான சேவையை டாடா குழுமம் தொடங்கியது. 1946-ம் ஆண்டு இதற்கு ஏர் இந்தியா என பெயர் சூட்டப்பட்டது. 1953-ம்ஆண்டு இந்நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக மாறியது. இருந்தபோதிலும் 1977-ம் ஆண்டுவரை ரத்தன் டாடா இந்நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
ரூ.18 ஆயிரம் கோடி
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு எடுத்தது. இதைத் தொடர்ந்து பங்கு விலக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 27-ம் தேதி டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையிலிருந்து ஏர் இந்தியா விமானங்களில் ரத்தன்டாடாவின் அழைப்பு ஒலிபரப்பாகிறது.
- பிடிஐ