நாட்டில் நேற்றைவிட கரோனா தொற்று 10% குறைவு: ஒரே நாளில் 959 பலி எண்ணிக்கைக்கு காரணம் கேரளா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் புதிதாக 2,09,918 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 10% குறைவாகப் பதிவாகியுள்ளது. இருப்பினும் அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 14.5%லிருந்து 15.7% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 959 எனப் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை பரவலாக பீதியைக் கிளப்பியுள்ளது.

ஆனால், கேரள மாநிலம் கோவிட் மரணங்கள் பற்றிய கணக்கெடுப்பை முடித்து பழைய கணக்கின்படி உள்ள 374 மரணங்களையும் நேற்றைய கோவிட் மரணக் கணக்குடன் சேர்த்துள்ளதே இந்த எண்ணிக்கை உயரக் காரணம்.

ஆகையால் ஒரே நாளில் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,09,918.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 4,13,02,440.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,62,628 .

இதுவரை குணமடைந்தோர்: 3,89,76,122

சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 18,31,268 (4.43%).

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 15.77% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 959.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,95,050.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை: 1,66,03,96,227 (166 கோடி).

இன்று முதல் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கான இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE