கான்பூர்: கான்பூரில் எலக்ட்ரிக் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் டாட் மில் குறுக்குச் சாலை அருகே இந்த விபத்து நடந்தது.
இன்று அதிகாலை டாட் மில் அருகே வந்த எலக்ட்ரிக் பேருந்து ஒட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தாறுமாறாக ஓடியது. வழியில் நின்றிருந்தவர்கள் மீது பேருந்து மோதிச் சென்றதில் 6 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் பேருந்து ஒரு போக்குவரத்து காவல் பூத்தில் நுழைந்து அருகிலிருந்த ட்ரக்கில் மோதி நின்றது.
» பெகாசஸ் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்
» பழகுனர்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை: ரயில்வே அறிவிப்பு
உள்ளூர் போலீஸார் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனர். பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் அவரைத் தேடும் பணி நடைபெறுவதாக கான்பூர் துணை காவல் ஆணையர் பிரமோத் குமார் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் இரங்கல்: கான்பூர் பேருந்து விபத்து செய்தியறிந்து கவலையுற்றேன். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், விபத்தில் காயமடைந்தோர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.