மத்திய பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதில் மாநில அரசுகளின் பரிந்துரை இல்லாமலேயே தாமே தன்னிச்சையாக நியமித்துக் கொள்ளும் வகையில் IAS (Cadre) விதிகளில் திருத்தம் செய்வதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகளின் மத்திய பிரதிநிதித்துவத்தில் தானே அதிகக் கட்டுப்பாட்டைக் கையில் வைத்துக் கொள்வதற்காகவே மத்திய அரசு இதனைச் செய்வதாக எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளது.
படேல் உருவாக்கிய வலுவான கட்டமைப்பு: இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் கட்டமைத்தது தான் அனைத்திந்திய சேவைகள். இந்தியா போன்ற பரந்து, விரிந்த கலாச்சார, மொழி ரீதியாக பரந்துபட்ட நாட்டை நிர்வாக ரீதியாக ஒருங்கிணைக்க அனைத்திந்திய அளவிலான கட்டமைப்பு தேவை என்பதை படேல் வலியுறுத்தினார். அதன் படியே ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற நிர்வாகப் பணிகளுக்கான ஆட்களை மத்திய அரசு நியமிக்கும், அதிகாரிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசே பிரித்து அனுப்பும். அப்படி அனுப்பப்படும் அதிகாரிகள் மத்திய அரசு, மாநில அரசுகளின் தேவைக்கேற்ப பணியிடங்களில் அமர்த்தப்படுவர். ஆனால், மாநில அரசில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியை மத்தியப் பணிகளில் நியமிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆஃப்ர் லிஸ்ட் வைத்திருக்கும். அதிலிருந்தே மத்திய அரசு தனக்குத் தேவையான அதிகாரிகளை தேர்வு செய்து கொள்ளும். அவ்வாறு எந்த அதிகாரி தேர்வு செய்யப்படுகிறாரோ அவரை மாநில அரசு உடனடியாக பணியிலிருந்து விடுவித்து விரைந்து மத்தியப் பணியை ஏற்றுக் கொள்ள வழிவகை செய்யும்.
இந்நிலையில், மத்திய பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதில் மாநில அரசுகளின் பரிந்துரை இல்லாமலேயே தாமே தன்னிச்சையாக நியமித்துக் கொள்ளும் வகையில் IAS (Cadre) விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்யவுள்ளது.
அரசியல் தலையீடுகள்: மத்தியப் பணிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிப்பதில் மரபுகள் பின்பற்றுப்பட்டு வந்தாலும் அவ்வப்போது அரசியல் தலையீடுகளால் இதில் மத்திய, மாநில அரசுகள் இடையே மோதல் ஏற்படுவது உண்டு. இதில் ஜெயலலிதாவுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த மோதல் முக்கியத்துவம் வாய்ந்தது.
2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் கைது செய்யபட்டனர். அப்போது மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு அழைத்தது மத்திய அரசு. ஆனால், அந்த அதிகாரிகளை மத்தியப் பணிகளுக்கு அனுப்ப ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாக்க மற்ற மாநில முதல்வர்களும் ஆதரவு தருமாறு கோரி கடிதம் எழுதினார்.
இது பழைய சர்ச்சை என்றால், நிகழ்காலத்தில் ஒரு நல்ல எடுத்துக்காட்டும் இருக்கிறது. அது மேற்குவங்க சம்பவம். கடந்த மே மாதம் மேற்குவங்கத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது பிரதமர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் மம்தாவும், தலைமைச் செயலர் பந்தோபாத்யாயாவும் புறக்கணித்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து மேற்கு வங்கத் தலைமைச் செயலர் பந்தோபாத்யாயை மத்திய அரசின் குறைதீர்க்கும் நலன் பிரிவுக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்திய மம்தா, உடனடி நடவடிக்கையாக பந்தோபாத்யாயாவை தனது தலைமை ஆலோசகராக மூன்றாண்டுகளுக்கு நியமித்துக் கொண்டார்.
இதேபோல், தமிழகத்திலும் திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டார்.
இது மாநில அரசின் உரிமைகளை மீறும் செயல் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மத்திய பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதில் மாநில அரசுகளின் பரிந்துரை இல்லாமலேயே தாமே தன்னிச்சையாக நியமித்துக் கொள்ளும் வகையில் IAS (Cadre) விதிகளில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழக அரசும் இது தொடர்பாக கடிதம் எழுதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.