1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மகாராஷ்டிராவில் ஜன. 24 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு: மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவில் 1 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை (ஜன.24) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான்வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை மூட கடந்த 8-ம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. பிப்ரவரி 15 வரை பள்ளிகளை மூட அப்போது உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் அரசின் முடிவால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் 10-15 நாட்களில் அரசு முடிவு எடுக்கும் என்று மாநிலசுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிர பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் நேற்று கூறும்போது, “மாநிலத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 24-ம் தேதி முதல் மீண்டும்பள்ளிகள் திறக்கப்படும். கிண்டர் கார்டன் வகுப்புகளையும் அதேநாளில் திறக்க முடிவு செய்துள்ளோம். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்படும். இது தொடர்பான எங்கள் பரிந்துரைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே ஒப்புதல் அளித்துள்ளார்” என்றார்.

- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE