மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கான 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இளநிலை, முதுநிலை மருத்துவப்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிந்தபொது பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இதை உறுதி செய்து கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய அரசு, அரசாணையை வெளியிட்டது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 7-ம் தேதி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போதைய இடஒதுக்கீட்டு நடைமுறைகளின்படி 2021-22-ம் ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தலாம் என்றுஇடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா அமர்வு முன்பு நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதஇடஒதுக்கீடு செல்லும். இந்த இடஒதுக்கீடு தகுதிக்கு முரணானது கிடையாது. போட்டித் தேர்வுகளை மட்டுமே கணக்கில் வைத்து தகுதியை மதிப்பிட முடியாது. தனிநபரின் சிறப்புதன்மை, தகுதி, குணம் ஆகியவற்றை தேர்வில் மூலம் கண்டறிய முடியாது.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான வருமான வரம்பு குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதுதொடர்பான பாண்டே கமிஷனின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக மார்ச் இறுதியில் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE