சுழன்றடிக்கும் 3-வது அலை: உச்ச நீதிமன்ற ஊழியர்களில் 5% பேருக்கு கரோனா தொற்று; 4 நீதிபதிகளும் பாதிப்பு

By ஏஎன்ஐ

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 5 சதவீதம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 32 நீதிபதிகளில் 4 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கரோனா 3-வது அலை வேகமெடுத்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 20,000-க்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா 2-வது அலை ஓய்ந்தபின், நீதிமன்ற வழக்காடு பணிகள் நேரடியாக நடக்கத் தொடங்கியது. கரோனா முதல் அலையில் தொடங்கி தொடர்ந்து காணொலி வாயிலாகவே நடந்து வந்தது. ஆனால் கரோனா 3-வது அலை தொடங்கியபின், நீதிபதிகளும், ஊழியர்களும் கரோனாவுக்கு இலக்காகியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் 32 நீதிபதிகள் இருக்கும் நிலையில், அவர்களில் 4 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 3,000 ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகிறார்கள்; இதில் குறைந்தபட்சம் 150 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதாவது உச்ச நீதிமன்ற ஊழியர்களில் 5 சதவீதம் பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஏராளமானோர் பிசிஆர் பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருக்கிறார்கள். அந்த முடிவுகள் வந்தபின் தொற்று மேலும் அதிகரிக்கும்.

டெல்லி உயர் நீதிமன்றத்திலும் 4 நீதிபதிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஏராளமான ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி முதல் அடுத்த 2 வாரங்களுக்கு வழக்குகள் அனைத்தும் காணொலி மூலமே விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அதன் சூழலை ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE