மிரட்டும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 1.79 லட்சம் பேருக்குக் கரோனா; ஒமைக்ரான் பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்தது

By ஏஎன்ஐ


புதுடெல்லி : இந்தியாவில் கரோனா 3-வது அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1.79 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒமைக்ரான் பரவலும் 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 759 ஆயிரத்து 723 பேர் கரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727ஆக அதிகரி்த்துள்ளது. கடந்த 227 நாட்களு்குப்பின் ஒரேநாளில் 1.79 லட்சம்பேர் கரோனாவில் பாதிக்கப்படுவது இதுதான் முதல்முறை.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் கடந்த 197 நாட்களில் இல்லாத அளவாக 7 லட்சத்து 23 ஆயிரத்து 619 ஆக அதிகரித்து 2.03 சதவீதமாக உயர்ந்துவிட்டது. கடந்த 227 நாட்களில் சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது இதுதான் முதல்முறையாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 146 பேர் உயிரிழந்தனர், இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 83 ஆயிரத்து 936 ஆகஅதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் பரவலின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, ஒட்டுமொத்த பாதிப்பு 4,033 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,552 பேர் குணமடைந்துவிட்டனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,216 பேரும், டெல்லியில் 513 பேரும், கர்நாடகாவில் 441 பேரும், ராஜஸ்தானில் 529 பேரும், கேரளாவில் 333 பேரும், குஜராத்தில் 236 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதமும் 96 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனா சிகிச்சையில் 1.33 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். தினசரி பாசிட்டிவ் வீதம் 13.29 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் வீதம் 7.92 ஆகவும் இருக்கிறது. உயிரிழப்பு வீதம் 1.36 சதவீதமாக இருக்கிறது.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 13,52,717 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, ஒட்டுமொத்தமாக 69,15,75,352 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை 151.94 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 29.60 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இ்வ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE