புதுடெல்லி: புல்லி பாய் செயலியை உருவாக்கிய மாணவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சல்லி டீல் செயலியை உருவாக்கிய மாணவரை மத்தியப் பிரதேசம் இந்தூரில் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
முஸ்லிம் பெண்களை இணையதளத்தில் அவதூறாகச் சித்தரித்து, அவர்களை ஏலம் விட்ட புல்லி பாய் செயலியை உருவாக்கியவரும், இதில் மூளையாகச் செயல்பட்ட அசாமைச் சேர்ந்த 21 வயதான பொறியியல் கல்லூரி மாணவரை டெல்லி போலீஸார் ஏற்கெனவே கைது செய்த நிலையில் தற்போது சல்லி டீல் செயலியை உருவாக்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தைப் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் புல்லி பாய் ஆப்ஸ் குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸிலும், டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் (முஸ்லிம்) டெல்லி போலீஸிலும் புகார் செய்திருந்தனர். இரு நகரங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
சிவசேனா எம்.பி. பிரியங்கா திரிவேதி ட்விட்டரில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்திருந்தார்.
ஹிட்ஹப் ஆப்ஸ் மூலம் சல்லி டீல், புல்லி பாய் ஆகிய பெயர்களில் வரும் அந்தச் செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தைப் பதிவிட்டு டீல் ஆஃப் தி டே என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்த வழக்கில் மும்பை, டெல்லி போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மாணவர், 21 வயதான மாணவர் மயங்க் ராவல், 19 வயதான ஸ்வேதா சிங் என்ற மாணவி, பொறியியல் மாணவர் விஷால் குமார் ஜா ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதில் புல்லி பாய் செயலியை உருவாக்கிய மாஸ்டர் மைண்ட் அசாமைச் சேர்ந்த நீரஜ் பிஸ்னோய் அசாமில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அதில் முக்கியத் திருப்பமாக பெண்களை ஏலம் விடப் பயன்படுத்திய சல்லி டீல் செயலியை வடிவமைத்தவர் குறித்து விசாரணையில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்தியப் பிரதேசம் இந்தூருக்கு விரைந்த டெல்லி போலீஸார் அம்கரேஸ்வரர் தாக்கூர் (வயது 21) என்ற மாணவரைக் கைது செய்தனர். இவர்தான் சல்லி டீல் செயலியை உருவாக்கிய மாஸ்டர் மைண்ட் ஆவார்.
டெல்லி போலீஸ் ஆணையர் கேபிஎஸ் மல்ஹோத்ரா கூறுகையில், “முதல்கட்ட விசாரணையில் ட்விட்டர் மூலம் நண்பர்கள் இணைந்து செயலியை உருவாக்கி, முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களைப் பதிவிடலாம் என்று முடிவு செய்தனர். இதற்காக ஹிட் ஹப் என்ற தளத்தைப் பயன்படுத்தி, ட்விட்டர் மூலம் தங்களின் செயலியை அனைவருக்கும் பகிர்ந்து முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு அவமானப்படுத்தியுள்ளனர்.
இதன்படி, சல்லி டீல் செயலியை உருவாக்கிய இந்தூரைச் சேர்ந்த அம்கரேஸ்வரர் தாக்கூர் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இவர் பிசிஏ முடித்துவிட்டு ஐபிஎஸ் அகாடமியில் சேர்ந்து படித்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.