கேரளப் பெண் பிந்து அம்மினி மீது தாக்குதல்: நடுரோட்டில் வைத்து அடித்த  நபர் கைது

By செய்திப்பிரிவு

கேரளாவில் தடையை மீறி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றதாகக் கூறப்பட்ட பிந்து அம்மினி கோழிக்கோடு கடற்கரையில் வைத்து திடீரென ஒருவரால் தாக்கப்பட்டார். அந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற நடைமுறை காலம் காலமாக இருந்து வந்தது. இந்த நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லலாம் என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பைக் காரணமாக வைத்துப் பெண்கள் சிலர் ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்றதால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது.

இதில் பிந்து அம்மினியும் ஒருவர். இவர் சபரிமலைக்குச் செல்கிறேன் எனத் தடையை மீறிச் செல்லும்போது பல முறை தாக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலையில் கோழிக்கோடு சென்ற அவரை ஒருவர் கீழே பிடித்துத் தள்ளி சரமாரியாக அடித்துள்ளார். கோழிக்கோடு கடற்கரை சென்ற அவரை ஒருவர் இப்படி அடித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தன்னைச் சிலர் தாக்க வரக்கூடும் என முன்பே போலீஸில் சொன்னதாகவும், போலீஸ் தான் அளித்த புகாரைக் கண்டுகொள்ளவில்லை எனவும் பிந்து அம்மினி புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE