இரு மதங்களுக்கு இடையே வெறுப்பை உண்டாக்கும் பேச்சு: ஹரித்துவார் போலீஸார் வழக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

ஹரித்துவார்: இரு மதங்களுக்கு இடையே வெறுப்பை உண்டாக்கும் வகையில் ஹரித்துவாரில் நடந்த மதமாநாட்டில் பேசியதுதொடர்பான வீடியோ வெளியானதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் கடந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகியபின், ஒருவர் மீது மட்டும் ஹரித்துவார் போலீஸார் பெயரளவுக்கு வழக்கப்பதிவு செய்துள்ளனர்.

இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ஜிதேந்திரநாராயன் தியாகி என்பவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவரின் இயற்பெயர் வாசிம் ரிஸ்வி. முஸ்லிமாக இருந்து இந்துவாக மதம்மாறியவர். உத்தரப்பிரதேச மத்திய வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவராக ரிஸ்வி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரித்துவாரில் நடந்து வரும் மதமாநாட்டில் குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக சிலர் பேசிய பேச்சுகள் கடந்த 17 ஆம் தேதிமுதல் 20 ஆம் தேதிவரை சமூக வலைத்தளத்தில் வைரலாகின. இந்தப் பேச்சுக்கு முன்னாள் ராணுவத் தளபதி, சமூக ஆர்வலர்கள், சர்வதேச டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீஸாரிடம் முதலில் கேட்டபோது, யாரும் புகார் அளிக்காததால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்தனர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், ஆர்டிஐ ஆர்வலர் சாகேத் கோகலே ஆகியோர் அளித்த புகாருக்குப்பின், இந்துத்துவா தலைவர் ஜிதேந்திரநாராயன் தியாகி என்பவர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நராாயண் தியாகி

போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் “ இஸ்லாம் மதத்துக்கு எதிராக அவதூறான மற்றும் ஆத்திரமூட்டும் பேச்சுக்களைப் பேசினார்” என்று மட்டும் வழக்குப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்துத்துவா தலைவர் வாசிம் ரிஸ்வி என்ற ஜிதேந்திர நாராயன் தியாகி பேசுகையில் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பிரபாகரன் போலவும், பிந்த்ரன்வாலே போலவும் மாற வேண்டும். விடுதலைப்புலிகள் பிரபாகரன் போல இந்து இளைஞர்கள் மாறினால் ரூ.ஒரு கோடி தருகிறேன்”எனப் பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜிதேந்திரநாராயன் தியாகி அளித்த பேட்டியில், “ ஒவ்வொரு கோயிலிலும் ஒரு பிரபாகரன், காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பிந்த்ரன்வாலே, ஷாபெக் சிங் ஆகியோர் போல் இல்லாவிட்டால், இந்துக் கோயிலைக் காப்பாற்ற முடியாது” எனத் தெரிவித்தார்

இது குறித்து உத்தரகாண்ட் காவல் டிஜிபி அசோக் குமார் கூறுகயில் “ ஹரித்துவார் தரம் சனாசத் நிகழ்ச்சியில் நடந்த வெறுப்புப் பேச்சுக்கு எதிராக புகார் எழுந்ததையடுத்து, 153ஏ பிரிவில் வவக்குப்பதிவு செய்துள்ளோம். வாசிம் ரிஸ்வி என்பவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின் அடிப்படையில் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE