தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

அனைவரையும் ஒன்றாக இணைக்கும் துணிச்சலான பிரதமர் இந்தியாவுக்குத் தேவை: பரூக் அப்துல்லா பேச்சு

ஏஎன்ஐ

புதுடெல்லி: இந்து, முஸ்லிம், சீக்கியர்கள் அல்லது யாராகட்டும் அனைவரையும் இணைக்கும் துணிச்சலான பிரதமர்தான் இந்தியாவுக்குத் தேவை. அரசியல் காரணமாகப் பிளவுபடுத்துபவர் தேவையில்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

டெல்லியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா எழுதிய புத்தக வெளியீட்டுவிழா நேற்று நடந்தது. அதில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''இந்த தேசத்தின் மக்கள் வலிமையாக இருந்தால்தான் இந்தியா வலிமையாக மாறும். அனைவரையும் ஒன்றாக இணைக்கும், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவரையும் இணைக்கும், அரசியலால் பிளவுபடுத்தாத பிரதமர்தான் இந்தியாவுக்குத் தேவை. இந்தியாவுக்குப் பிரிவினைகள் தேவையில்லை. ஆனால், சோகம் என்னவென்றால், ஒவ்வொரு தேர்தலும் இந்தியாவையும், மக்களையும் பிளவுபடுத்துகின்றன.

நான் முஸ்லிம்தான், அனைத்து மதங்களின் மீதும் என்னுடைய மதத்தைவிட மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இதனால் என்ன தவறு வந்துவிடப் போகிறது. ஆனால், இன்றைய நிர்வாகத்தைப் பாருங்கள். எவ்வாறு நாம் ஒவ்வொரு மூலையிலும் பிரிந்து கிடக்கிறோம். நமக்கு வலிமையான இந்தியா தேவை.

இந்திய மக்கள் வலிமையாக மாறாதவரை, இந்தியா வலிமையாக மாறாது. இந்தக் கருமேகங்கள் கடந்து சென்றால், மலர்ச்சியான புத்துணர்ச்சியான இந்தியாவைக் காணலாம். இந்தியா அனைவருக்குமானது, ஒருவருக்கானது அல்ல''.

இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT