பாஜகவினர் வரலாற்றை மாற்றி வருகிறார்கள், இனிமேல் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கரை தேச தந்தையாக்கி விடுவார்கள் என ஏஐஎம்ஐ கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
அப்போது அவர் மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் தான் பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் கருணை மனு எழுதினார், இது வரலாற்று உண்மை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இதனை ஏஐஎம்ஐ கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
» மகாத்மா காந்தி சொல்லி தான் ஆங்கிலேயே அரசுக்கு சாவர்க்கர் கருணை மனு எழுதினார்: ராஜ்நாத் சிங் பேச்சு
‘‘பாஜகவினர் வரலாற்றை சிதைப்பதை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது தொடர்ந்தால், அவர்கள் மகாத்மா காந்தியை நீக்கிவிட்டு சாவர்க்கரை தேசத்தின் தந்தையாக்கி விடுவார்கள். அவர் மகாத்மா காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிபதி ஜீவன் லால் கபூரின் விசாரணையில் உடந்தையாக இருந்ததாக அறிவிக்கப்பட்டார்’’ எனக் கூறியுள்ளார்.