மகந்த் நரேந்திர கிரி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. நாளை உடற்கூறு ஆய்வு நடக்கும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபடத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம், அலகாபாத்தில் உள்ள பாகம்பரி மடத்தைச் சேர்ந்த அகில் பார்திய அகாரா பரிஷத் தலைவர் மகந்த் நரேந்திர கிரி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரின் உடலை மீட்ட போலீஸார் இது தற்கொலையா என்றும் விசாரித்து வருகின்றனர்.
அவரின் அறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கடிதத்தில், மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனக்குப் பின் மடத்தில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகந்த் நரேந்திர கிரி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஆதித்யநாத், துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோர் மகேந்திர கிரி உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
» கோவாவில் தனியார் துறையில் 80 சதவீத இடஒதுக்கீடு: கேஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி
» மாநிலங்களவைத் தேர்தல்: மத்திய அமைச்சர் எல்.முருகன் போபாலில் வேட்புமனுத் தாக்கல்
அதன்பின் முதல்வர் ஆதித்யநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''மகந்த் நரேந்திர கிரி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. காவல் ஏடிஜி, ஐஜி, டிஐஜி ஆகியோரிடம் வழக்கு விவரங்களை நேரடியாகவே கேட்டு வருகிறேன். இந்த மர்ம மரணம் தொடர்பாக சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள்'' எனக் குறிப்பிட்டார்.
துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா நிருபர்களிடம் கூறுகையில், “இந்த விவகாரத்தில் மாநில அரசு தீவிர விசாரணைக்கு முடுக்கிவிட்டுள்ளது, தேவைப்பட்டால், சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடத் தயாராக இருக்கிறோம். இந்த விவகாரம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விசாரணைக்கும் தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தும். அகிலா பரிஷத் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை அரசு மறுக்காது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மகேந்திர கிரியின் மரணம் தொடர்பாக அவரின் சீடர் ஆனந்த் கிரிக்கு எதிராக ஐபிசி 306 பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் கூறுகையில், “மகேந்திர கிரியின் சீடர் கிரி பவான் மகராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு சீடர் ஆனந்த் கிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் கிரி கூறுகையில், “எனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது. குருஜியிடம் இருந்து பணம் பறிக்க முயன்று அதில் என்னுடைய பெயரைக் கடிதத்தில் சேர்த்துவிட்டார்கள். இது தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். குருஜி அவரின் வாழ்க்கையில் ஒருபோதும் கடிதம் எழுதியது இல்லை. அவர் தற்கொலை செய்யவில்லை. அவரின் கையொப்பம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.