ம.பி. மாநிலங்களவைத் தேர்தல்: மத்திய அமைச்சர் எல்.முருகன் வேட்புமனுத் தாக்கல்

By ஏஎன்ஐ

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கான மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் 2 இடம், மே.வங்கம், மகாராஷ்டிரா, அசாம், மத்தியப் பிரதேசத்தில் தலா ஒரு இடம் என 5 மாநிலங்களில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.

கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத மத்திய அமைச்சர்கள் அனைவரும், 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என்று விதி உள்ளது.

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், எல்.முருகனை வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்திருந்தது.

இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று போபால் நகரில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது உடன் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில பாஜக தலைவர் விஷ்ணு தத் சர்மா, மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல், மாநில அமைச்சர்கள் நரோட்டம் மிஸ்ரா, பூபேந்திர சிங் ஆகியோர் இருந்தனர்.

காங்கிரஸ் கட்சி எந்த வேட்பாளரையும் நிறுத்தப் போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டால், எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE