காவிரியில் கழிவுநீர் கலப்பு விவகாரம்: கர்நாடகம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு 8 வாரங்களுக்குள் பதில ளிக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய சிறு பாசனங்கள் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ‘நாள் ஒன்றுக்கு 1,400 மில்லியன் லிட்டர் கழிவுநீர் தமிழகத்திற்கு செல்கிறது. 889 மில்லியன் லிட்டர் கழிவுநீர் பினாகினி மற்றும் தென் பெண்ணையாறு வழியாகவும், எஞ்சிய கழிவுநீர் அர்க்காவதி வழியாகவும் காவிரியில் கலந்து தமிழகத்திற்குள் செல்கிறது’ என்று தெரிவித்திருந்தார். இதை அடிப்படையாக வைத்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு மனுவில், ‘காவிரி யில் தண்ணீர் மாதிரி எடுத்து சோதனை செய்ததில் அனுமதிக் கப்பட்ட அளவைவிட அதிகமாக கழிவுநீர் கலந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரமாக உள்ள காவிரியில் பெங்களூரு நகரத் தின் கழிவுநீர் கலப்பதால், காலரா, மலேரியா, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. வேதிப்பொருள் கலப்பதால் பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே, கழிவு நீரை சுத்திகரித்து காவிரியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப் பட்டிருந்தது. இம்மனுவில், மத்திய அரசையும் இணைத்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இம்மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழக அரசு தெரிவித்துள்ள குற்றச் சாட்டுகளுக்கு 8 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE