இந்தியா மீது பாகிஸ்தான் நிழல் யுத்தம் நடத்துகிறது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

By ஏஎன்ஐ

இந்தியா மீது பாகிஸ்தான் நிழல் யுத்தம் நடத்துவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் 77வது பயிற்சி வகுப்புகள் அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்றார்.

அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இரண்டு போர்களில் தோற்றுவிட்டது. அதனால் இப்போது நிழல் யுத்தம் நடத்துகிறது. தீவிரவாதம் அவர்கள் கொள்கையின் ஒரு பகுதியாகிவிட்டது.

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளைத் தூண்டிவிட்டு, அவர்களுக்கு ஆயுதம் அளித்து, நிதி வழங்கி, பயங்கரவாத செயல்களுக்கான பயிற்சியும் வழங்குகிறது. இன்றும்கூட எல்லையில் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். ஆனால் நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.

தேசத்தின் பாதுகாப்பை அரசு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்பதே அந்த நம்பிக்கை. இந்தியா தன் தேசத்தில் பயங்கரவாதம் தலை தூக்காமல் தடுப்பதோடு, பயங்கரவாத்தை ஊக்குவிக்கும் நிலத்திலேயே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தவும் தயங்காது என மக்கள் நம்புகின்றனர்.

நம் தேசத்தை எப்போதும் குறிவைக்கும் பாகிஸ்தானை நம் வீரர்கள் திறம்பட எதிர்கொள்கின்றனர்.

இன்று எல்லையில் போர் நிறுத்தம் செயல்பாட்டில் உள்ளது என்றால் அது இந்தியாவின் வலிமையால் மட்டுமே நடந்துள்ளது. 2016ல், நடந்த துல்லியத் தாக்குதலும், 2019ல் பாலாகோட்டில் நடத்தப்பட்ட தாக்குதலும் அதற்கு உதாரணம்.

சீனா எல்லையில் அத்துமீறி விரிவாக்கம் செய்த பிரச்சினையிலும் கூட இந்தியா புதுமையான உத்திகளால் சவால்களை சமாளிக்க முடிந்தது.

ஆப்கானிஸ்தான் மீதான கொள்கையை இந்தியா மாற்றி அமைக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE