கரோனா தடுப்பூசி; முன்பதிவு செய்ய வாட்ஸ் அப் எண்: மன்சுக் மாண்டவியா தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இதற்கான வாட்ஸ் அப் எண்ணையும் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் ஒன்று போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது 42 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "#COVID19 தடுப்பூசி இடங்களை இப்போது வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்யலாம். http://wa.me/919013151515 மூலம் MyGovIndia கரோனா ஹெல்ப் டெஸ்கிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்புவதன் மூலம் தங்களுக்கு முன்பதிவு செய்யலாம்’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE