இமாச்சலப் பிரதேசத்தின் கின்னாரில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 32-க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. கின்னார் என்ற இடத்தில் சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது.
சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மண்ணுடன் மண்ணாக புதைந்து போயின. பேருந்தில் 32 பயணிகள் இருந்ததாக தெரிகிறது. நிலச்சரிவு ஏற்பட்டபோது 6 பேர் உயிருடன் தப்பித்தனர். உயிரிழந்த இருவரது உடல் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
» 4 லட்சம் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.1625 கோடி மூலதன நிதி: பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்
» கேரளாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய 40 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று
மீட்பு பணியில் இந்தோ- திபெத்திய எல்லை போலீஸாரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“இமாச்சல பிரதேச மாநிலம் கின்னாரில் நிகழ்ந்த நிலச்சரிவையடுத்து, அங்குள்ள நிலவரம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெயராம் தாகூருடன் பேசினார். தற்போது நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.