ஓர் ஆண்டுக்குப்பின் பிரதமர் இல்லத்தில் கூடியது மத்திய அமைச்சரவை: புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஓர் ஆண்டுக்குப்பின் இன்று மீண்டும் நேரடியாக கூடியது. நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத் தொடர் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் அனைத்தும் காணொலி வாயிலாகவே நடந்து வந்தன. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் நேரடியாகப் பங்கேற்றனர். அதன்பின் ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை கூட்டம் காணொலி வாயிலாகவே நடந்தப்பட்டு, முக்கிய விவகாரங்களும், முடிவுகளும் காணொலி வாயிலாகவே எடுக்கப்பட்டன.

இந்தநிலையில் மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். ஏராளமான அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால் மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்து அறிவுரை வழங்கவும் நேரடியாக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.
ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் மத்திய அமைச்சரவை நேரடியாக பிரதமர் மோடி இல்லத்தில் இன்று காலை கூடியது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

வரும் 19-ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், எழுப்பும் விவகாரங்களுக்கும் பதில் அளிப்பது, அவர்களை சமாளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE