4 வருட இளங்கலை படிப்புக்கு தடை விதிப்பதில் பல்கலைக்கழக மானியங்கள் குழு (யு.ஜி.சி) - டெல்லி பல்கலைக்கழகம் இடையே சர்ச்சை நிலவும் சூழலில் டெல்லி பல்கலை துணை வேந்தர் தினேஷ் சிங் ராஜினாமா செய்தார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில், 4 வருட இளங்கலை பட்டப்படிப்பை ரத்து செய்யுமாறு யு.ஜி.சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவுறுத்தியது. இதற்கு, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
யு.ஜி.சி.யின் இந்த பரிந்துரையை எதிர்த்து பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவு ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். யு.ஜி.சி.யின் இந்த முடிவு பல்கலைக்கழகத்தின் சுயாட்சி உரிமையில் தலையிடும் நடவடிக்கையாகும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், டெல்லி பல்கலை துணை வேந்தர் தினேஷ் சிங் ராஜினாமா செய்துள்ளார். தினேஷ் சிங் ராஜினாமாவை, பல்கலைக்கழகத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் மலேய் நீரவ் உறுதிபடுத்தியுள்ளார்.
தினெஷ் சிங், டெல்லி பல்கலைக்கழகத்தில் 4 வருட இளங்கலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தார் என்பது கவனிக்கத்தக்கது.