ரயில்வே வரைபடத்தில் இடம்பெற்ற மணிப்பூர் மாநிலம்: முதல் பயணிகள் ரயில் விரைவில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

நாட்டின் சிறிய மாநிலங்களில் ஒன்று மணிப்பூர் ஆகும். இந்த மாநிலத்தில் ரயில் வசதி கொண்டு வரப்படவில்லை.

இந்நிலையில் மணிப்பூரில் பல்வேறு ரயில் நிலையங்கள் அமைத்து பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் நேற்று அசாம் மாநிலத்தின் சில்சார் ரயில் நிலையத்திலிருந்து மணிப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வைன்கைசுன்பாவோ ரயில் நிலையத்துக்கு பயணிகள் ரயில் கடந்த வாரம் சோதனை முறையில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தூரம் 11 கிலோ மீட்டர். புதிய ரயிலை அப்பகுதி மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

இதுகுறித்து வட கிழக்கு ரயில்வே மண்டல மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி நிரிபென் பட்டாச்சார்யா கூறும்போது, “தற்போது அசாமிலிருந்து, வைன்கைசுன்பாவோ ரயில் நிலையம் வரை அகல ரயில் பாதை போடப்பட்டு பயணிகள் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. விரைவில் பயணிகள் ரயில் இந்த தடத்தில் அறிமுகம் செய்யப்படும்” என்றார்.

ட்விட்டரில் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் கூறும்போது, "இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. இதற்காக பிரதமர் மோடிக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் மாநில மக்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE