பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி இன்று காலமானார். அவருக்கு வயது 84.வருக்கு வயது 84.
பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மே 29 ஆம் தேதியன்று மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கரோனா தொற்றும் உறுதியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
அவரது இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அவரது மறைவுச் செய்தி மும்பை உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுச் செய்திக்கு நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
ஸ்டான் சுவாமி திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார். இந்நிலையில்தான் இவரை தேசிய புலனாய்வு மையம் கைது செய்தது.
பீமா கோரேகான் வன்முறை வழக்கு:
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பீமா கோரேகன் பகுதியில் 2017-ம் ஆண்டு இருசமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்த்து.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் ஸ்டான் சுவாமியைக் கைது செய்தனர்.
ஸ்டேன் சுவாமிக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த அமைப்புடன் சேர்ந்து இவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்று என்ஐஏ அவர் மீது குற்றஞ்சாட்டியது.
ஏற்கெனவே பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிறையில் சரியான சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று அவரது தரப்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டுப்பட்டு வந்தது. கடைசியாக அவர் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவில் கூட என்னை மருத்துவமனையில் சேர்ப்பதால் எந்த பலனும் இருக்காது. என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை. நான் இந்த சிறையிலேயே இறந்துவிடுகிறேன் என்னை மருத்துவமனையில் சேர்க்காதீர்கள். முடிந்தால் எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்குங்கள் என்று கூறியிருந்தார்.
ஸ்டேன் சுவாமிக்கு உரிய மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் கடந்த மே 29 ஆம் தேதியன்று மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவி சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கினர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார்.