ட்ரோன்களை ஆயுதமாக பயன்படுத்தும் தீவிரவாதிகள்: உலக நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை

வெடிகுண்டுகளை தாங்கி வரும் ட்ரோன்களை தீவிரவாதிகள் புதிய ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாகவும் இதை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் அடுத்த குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக ராணுவம் செயலில் இறங்கியது. ராடார் மூலம் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தொடர் தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீவிரவாதம் குறித்த சிறப்பு விவாதம் நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலர் வி.எஸ்.கே. கவுமுடி பங்கேற்று பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தீவிரவாதம், ஒரு நாட்டுக்கான பிரச்னையல்ல. உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது. ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது ஒரு கொடூர தாக்குதல்.
தீவிரவாதிகளின் புதிய ஆயுதமாக ட்ரோன் மாறி வருகிறது. நவீன தொழில்நுட்பங்கள் தீவிரவாதிகளுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் இப்போது பல தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சமூகவலைதளங்களையும் தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE