கேரள அரசியல் வரலாற்றில், தந்தை, மகன், எம்எல்ஏவாக, எம்.பி.யாக இருப்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். முதல் முறையாக மாமனாரும், மருமகனும் எல்எல்ஏவாகி சட்டப்பேரவைக்குச் செல்ல உள்ளனர்.
அவர்கள் வேறுயாருமல்ல. முதல்வர் பினராயி விஜயனும், அவரின் மருமகன் முகமது ரியாஸும்தான் வெற்றி பெற்று ஒன்றாகச் சட்டப்பேரவைக்குள் செல்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனின் மகள் வீணாவைத் திருமணம் செய்தவர் முகமது ரியாஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவராக முகமது ரியாஸ் உள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் கோழிக்கோடு மாவட்டம், பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முகமது ரியாஸ் வெற்றி பெற்றார். தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
» 16.54 கோடி இலவச தடுப்பூசி: மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது
» கரோனா பரவல் வேகம்; மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சற்று குறைவு
கேரள சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் தந்தை -மகன், தந்தை - மகள் என சட்டப்பேரவைக்குள் எம்எல்ஏக்களாக வந்துள்ளனர். ஆனால், முதல் முறையாக மாமனார், மருமகன் ஜோடியாக சட்டப்பேரவைக்குள் வருவது இதுதான் முதல் முறையாகும்.
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் முகமது ரியாஸ் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தலில் தந்தை மகன், அரசியல் தலைவர்களின் நெருங்கிய உறவுகள் எனப் போட்டியிட்டாலும் அவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மாமனார், மருமகன் ஜோடியாக யாரும் வெற்றி பெறவில்லை.
பாலா தொகுதியில் போட்டியிட்ட இடதுசாரி கூட்டணியில் இருந்த கேரள காங்கிரஸ் மாணி கட்சியின் தலைவர் ஜோஸ் கே.மாணி, திரிகாரிபூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோஸ் கே.மாணியின் மைத்துனர் எம்.பி.ஜோஸப் இருவரும் தோல்வி அடைந்தனர்.
கேரள காங்கிரஸ் தலைவர் பி.ஜே.ஜோஸப் தொடுபுழாவில் போட்டியிட்டார். அவரின் மருமகன் ஜோஸப், கொத்தமங்களம் தொகுதியில் போட்டியிட்டார். இருவருமே தோற்றுப்போனார்கள்.
காங்கிரஸ் தலைவர்கள் கே.முரளிதரன் நீமம் தொகுதியிலும், பத்மஜா வேணுகோபால் திருச்சூர் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தனர்.