உயர் நீதிமன்றங்கள் இந்த ஜனநாயகத்தின் தூண்கள். அவர்களை மனச்சோர்வு அடைய வைக்க முடியாது, அதேநேரத்தில் நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்துக்களையும் வெளியிடக்கூடாது என்று ஊடகங்களுக்கும் தடைவிதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் கோரி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கிஸ் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு தேர்தல் ஆணையத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. அதில், “தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தற்போதைய நிலைக்குத் தேர்தல் ஆணையம்தான் காரணம். அந்தக் குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியாது.
கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்ததாகவும், கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகவும் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
கரோனா வைரஸ் பரவியதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்று சென்னைஉயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த சனிக்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டிஆர் சந்திரசூட், எம்ஆர் ஷா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி ஆஜராகினார். அவர் கூறுகையில் “ தமிழகத்தில் கரோனா வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கை, மேலாண்மை தேர்தல் ஆணையத்தின் கீழ் வராது. தேர்தல் முடிந்து 20 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், கரோனா பரவ தேர்தல் ஆணையத்தை காரணம்காட்டி, கொலைகுற்றத்தை உயர் நீதிமன்றம் சாட்டியுள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஏற்பட்ட கரோனா பாதிப்புக்கு தேர்தல் ஆணையத்தை குறைகூறுவதா உயர் நீதிமன்றத்தின் கருத்துக்களைக்கூட ஊடகங்கள் விவாதிக்கிறார்கள். இதற்கு ஒரு எல்லை வகுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவி்த்தார்.
அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்தவில்லை என தெளிவாக கூறியுள்ளது, எனவே அவர்களின் கருத்துக்கள் உள்நோக்கமானது அல்ல. நீதிமன்றத்தின் விமர்சனங்களையும், கருத்துக்களையும் சரியான முறையில் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள். தேர்தல் ஆணையம் மோசமாக செயல்படுவதாக உயர் நீதிமன்றம் கூறியதாக அர்த்தமில்லை. .
நம்பகத்தன்மையை உருவாக்கத்தான் ஊடகங்கள் அனைத்தையும் தெரிவிக்கின்றன. உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் சில கருத்துக்கள் அடிக்கடி பெரிய விவாதத்தை உருவாக்குகிறது . ஜனநாயகத்தில் ஊடகங்கள் மிகப்பெரிய கண்காணிப்பாளராக இருந்து வருகிறது. உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வாதங்கள், கருத்துக்களை வெளியிடாதீர்கள் என்று தடை விதிக்க முடியாது.
தலைமை தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அரசியல் சாசன அதிகாரம் அமைப்பு எனவே அதன் மீது மற்றொரு அரசியல்சாசன அதிகாரம் கொண்ட அமைப்பான உயர்நீதிமன்றம் கருத்து கூறக்கூடாது என சொல்லுகிறீர்களா? மேலும் அரசியல் சாசன அமைப்பான தலைமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நீதிமன்ற ஆய்வுக்கு வராது என்று கூறுவது தவறு
சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை, விமர்சனத்தை உங்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீதிமன்றங்கள் உங்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்றால் அது உங்களை திருத்திக் கொள்வதற்கானதாக எடுத்துக் கொள்ளுங்கள், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தவறை சரி செய்யுங்கள்.
நீங்கள் சிறப்பாகத்தான் செயல்படுகிறீர்கள். தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை பரிசீலிக்கிறோம், உயர் நீதிமன்றமத்தையும், தேர்தல் ஆணையத்தையும் சமநிலையோடு அணுக முயற்சிக்கிறோம்.
உயர் நீதிமன்றங்கள் இந்த ஜனநாயகத்தின் தூண்கள். அவர்களை மனச்சோர்வு அடைய வைக்க முடியாது. அதேநேரத்தில் நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்துக்களையும் வெளியிடக்கூடாது என்று ஊடகங்களுக்கும் தடைவிதிக்க முடியாது. இந்த வழக்கிற்கு விரைவாக தீர்வு வழங்குகிறோம்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.