ரஃபேல் போர் விமானம்: கோப்புப்படம் 
இந்தியா

பிரான்ஸிலிருந்து 3 ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வருகை: எண்ணிக்கை 14 ஆக உயர்வு

செய்திப்பிரிவு

பிரான்ஸிலிருந்து நாளை புறப்படும் 3 ரஃபேல் போர் விமானங்கள் மாலை குஜராத்துக்கு வந்து சேரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 3 ரஃபேல் போர் விமானங்களும் பின்னர் அம்பாலா விமானப் படைத்தளத்தில் உள்ள கோல்டன் ஆரோஸ் பிரிவில் சேர்க்கப்படும்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரஃபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில், அதில் 5 விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி இணைக்கப்பட்டன. 2-வது கட்டத்தில் 3 ரஃபேல் போர் விமானங்களும், 3-வது கட்டத்தில் 3 போர் விமானங்களும் வந்துள்ளன.

இந்நிலையில் 4-வது கட்டமாக நாளை 3 ரஃபேல் போர் விமானங்கள் குஜராத்துக்கு வர உள்ளன. பிரான்ஸில் உள்ள மெரிக்னாக் விமானப் படைத்தளத்தில் இருந்து நாளை காலை 7 மணிக்கு இந்த 3 ரஃபேல் போர் விமானங்களும் புறப்படும்.

சவுதி அரேபிய வான்வெளிப் பகுதியில் வந்தவுடன் அந்நாட்டு விமானப் படையின் ஏர்பஸ் 330 விமான உதவியுடன் நடுவானில் 3 ரஃபேல் போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்படும். எந்த இடத்திலும் தரையிறங்காமல் நாளை இரவு குஜராத்துக்கு 3 விமானங்களும் வந்து சேர்கின்றன. இதன் மூலம் ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர அடுத்த மாதம் 9 ரஃபேல் போர் விமானங்களும் இந்தியா வருகின்றன. இதில் 5 விமானங்கள் மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமரா விமானப் படைத்தளத்தில் நிறுத்தப்படும்.

இந்த ரஃபேல் போர் விமானம் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் ரஃபேல் விமானத்தில் உள்ளன.

SCROLL FOR NEXT