கரோனா காலத்தில் பெற்ற கடனுக்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கரோனா காலத்தில் பெற்ற கடனுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படுவதை எதிர்த்தும், வட்டி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் வர்த்தக நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சலுகை அளித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது.

வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு ரூ.2 கோடிவரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்தது.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையின்படி, “பிப்ரவரி 29-ம் தேதி நிலவரப்படி வங்கிகளில் ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு கரோனா காலத்தில் ஒத்திவைப்புச் சலுகையைப் பெற்றிருந்தால் அவர்கள் செலுத்தும் வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது. இந்தத் திட்டம் ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்

இந்தத் திட்டத்தில் 8 பிரிவினர் பயன்பெறுவார்கள், அதில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு தவணை செலுத்தியவர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் பொருட்கள் வாங்கி தவணை செலுத்துவோர், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் ரூ.2 கோடிவரை பெற்றவர்கள் பயன்பெறுவார்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ் சலுகை பெறும் வங்கிக் கணக்கு உடையவர்களின் கணக்கு பிப்ரவரி 29-ம் தேதிவரை என்பிஏ அதாவது வாராக்கடன் வங்கிக் கணக்காக இருந்திருக்கக்கூடாது.

இந்தத் திட்டத்தில் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள், நபார்டு வங்கிகள், வீட்டு வசதி வங்கிகள், வீடு கட்ட கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் கடன் பெற்றவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.

கரோனா காலத்தில் அதாவது மார்ச் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கடன் தவணையைக் கூட்டுவட்டியுடன் செலுத்தியவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்

இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 14-ம் தேதி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் அறிவித்த இந்த முடிவை மிக விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ‘‘6 மாத கடன் தவணை செலுத்துவதில் வழங்கப்பட்ட சலுகையில் வட்டிக்கு வட்டி விதிப்பதில் இருந்து அனைத்து துறைகளுக்கும் தளர்வு வழங்கினால், மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும். இதனால், நாடு முழுவதும் வங்கிகளின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படும்’’ என கூறியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE