ஒடிசாவில் கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட சுகாதார ஊழியர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதி

ஒடிசாவில் கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட சுகாதார ஊழியர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடுமுழுவதும் இன்று காலை நிலவரப்படி இதுவரை மொத்தம் 10,43,534 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஒடிசாவில் கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசிக்குப் பின்னரான பாதகமான நிகழ்வுகள் (AEFI) ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஆஷா தொழிலாளிக்கு ஜனவரி 19 -ம் தேதி கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவருக்கு அன்றே தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் மாவட்ட தலைமையக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரது உடல்நிலை சீராக இருக்கிறது.

பார்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஊழியர் செவிலியருக்கு ஜனவரி 16 ஆம் தேதி கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட நாளிலேயே அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பார்கரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

இவ்வாறு மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE