வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 19-வது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த 40 தலைவர்கள் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளேன். விவசாயிகளின் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், நாட்டு மக்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
உண்ணாவிரதம் புனிதமானது. நீங்கள் எங்கிருந்தாலும் நமது விவசாய சகோதரர்களுக்காக உண்ணாவிரதம் இருங்கள். அவர்களின் போராட்டத்தின் வெற்றிக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இறுதியில் விவசாயிகள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்".
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கட்சி அலுவலகத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.