இந்தியாவில் பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைசர் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.
அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியானது.
கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருத்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.
லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது.
பைசர் மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்துக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பைசர்- பயோஎன்டெக்கின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.
கரோனா தடுப்பு மருந்து முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் அளிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைசர் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றம் மருந்து நிறுவனத்திடமும் ஐரோப்பிய சுகாதாரத்துறையிடனும் பைசர் நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.