கேரள தங்கக் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பைசல் பரீத் என்பவர் கருதப்படுகிறார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, என்ஐஏ அளித்த தகவலின் அடிப்படையில், அவரை அந்நாட்டு சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர்.இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக என்ஐஏ டிஎஸ்பி தலைமையிலான குழு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள், பைசல் பரீத்துக்கு இவ்வழக்கில் உள்ள தொடர்பை விளக்கும் ஆவணங்களை அந்நாட்டு அதிகாரிகளிடம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தக் கடத்தலில் பைசல் பரீத்தின் பங்கு என்ன, தீவிரவாத அமைப்புகளுடன் அவர் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.