ராமர் கோயில் விவகாரத்தில் அமைதியான தீர்வை எட்ட பிரதமர் மோடியின் அறிவாற்றலும், தொலைநோக்குப் பார்வையும்தான் வழிவகுத்தது: ஆதித்யநாத் புகழாரம்

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் அமைதியான தீர்வை எட்டுவதற்கும், ராமர் கோயில் எனும் கனவை நனவாக்கவும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையும், அறிவாற்றலும்தான் வழிவகுத்தது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்நாயாத் புகழாரம் சூட்டினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் டெல்லியிலிருந்து லக்னோ நகரம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி நகரம் வந்து சேர்ந்தார்.

அயோத்தியில் உள்ள பழமையான அனுமன் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு செய்தார். அதன்பின் கடவுள் ஸ்ரீ ராமர் குழந்தை உருவ கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபட்டு இரவு நேரத்தில் மணத்துடன் மலரும் பாரிஜாத மல்லிச் செடியை நட்டு வைத்தார்.

அதன்பின் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ராமர் கோயிலுக்கான முதல் அடிக்கல்லான வெள்ளி செங்கல்லைத் தொட்டு வைத்தார்.

இந்த நிகழ்சச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், அறக்கட்டளைத் தலைவர் நிர்தயா கோபால் தாஸ் மகராஜ், தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மற்ற விஐபிக்கள், சாதுக்கள், பீடாதிபதிகள் என நூற்றுக்கணக்கோர் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்தபின் மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ராமர் உருவம் பதித்த அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அதில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பேசியதாவது:

''இன்று மிகவும் புனிதமான நாள். ராமர் கோயிலுக்கான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 500 ஆண்டுகளாக நடந்து வந்த பயணத்துக்கும், போராட்டத்துக்கும் பலன் கிடைத்துள்ளது. அதை நீதித்துறையும், அரசியலமைப்புச் சட்டமும் அங்கீகரித்துள்ளது.

பிரச்சினைகளை எவ்வாறு ஜனநாயக ரீதியிலும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டும் தீர்க்க முடியும் என்பதை பிரதமர் மோடியின் தலைமையில் சக்திவாய்ந்த இந்திய ஜனநாயகமும் மற்றும் நீதித்துறையும் உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது.

ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் எனும் கனவையும், ராமர் கோயில் விவகாரத்தையும் அமைதியான முறையில் தீர்வு காண பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையும், அறிவாற்றலும்தான் காரணம்''.

இவ்வாறு ஆதித்யநாத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE