புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை சரியாக செயல்படவில்லை என்ற புகார் மீது பதிலளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றை அடுத்து கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், வாழ்வாதாரம் இழந்து, தங்களது சொந்த ஊர்களுக்கு நடை பயணமாக புலம்பெயர தொடங்கினர் ,
இதில் சிலர் விபத்தில் சிக்கியும், உணவு, குடி நீர் இன்றியும் உயிரிழந்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பான செய்திகள் அடிப்படையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது உச்சநீதிமன்றம்.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இலவசமாக போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும், அவர்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து ஆவணப்படுத்த வேண்டுமென பல்வேறு உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
» அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு மும்மொழிக் கொள்கையை எதிர்க்க என்ன பயம்?- ஸ்டாலின் கேள்வி
ஆனால் இந்த உத்தரவுகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அசோக் பூசன் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,
அப்போது நீதிபதிகள், இந்த புகார்கள் மீது அனைத்து மாநில அரசுகளும் 3 வாரத்தில் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
* குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதா ?
*புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?
என்பது தொடர்பாக பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.